Wednesday, April 7, 2010

குறைந்து வரும் சதுப்புநிலக்காடுகளால் அரபிக்கடலுக்கு காத்திருக்கும் அபாயம்

ராமநாதபுரம்: இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் சதுப்புநிலக்காடுகள் குறைந்து வருவதால் அப்பகுதி அபாயத்தில் சிக்கும் நிலை உள்ளது.  நிலப்பரப்புக்கும், கடலுக்கும் இடையேயுள்ள வனப்பகுதியே சதுப்புநிலக்காடுகள் ஆகும். இவை உலக அளவில் வளம் மிகுந்த இயற்கை நிலைகளில் ஒன்றாகும். கடலோர வளத்தை அதிகரிக்க செய்வதோடு, வனப்பொருட்களை கொடுப்பதிலும், கடலோரத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன. குறிப்பாக கடலோர மீன்வள ஆதாரத்துக்கு சதுப்புநிலக்காடுகள் அவசியமாகிறது.
இதன் உயரிய உப்புத்தன்மை, வெப்பநிலை, கடல் ஏற்றம், இறக்கம், பலத்த காற்று , சகதியான மற்றும் பிராண வாயுவற்ற மணலமைப்பு, வேறு வனப்பகுதியில் இல்லாத சிறப்பு அம்சமாகும். இந்தியாவில் சதுப்பு நிலக்காடுகள் 4461 ச.கி.மீ., வரை பரவியுள்ளது. இவற்றில் பெரும்பாலும் கிழக்கு கடற்கரை பகுதியில் தான் அதிகமாக உள்ளது. கிழக்கு கடற்பகுதி (வங்காள விரிகுடா) 59சதவீதமும், மேற்கு கடற்கரை(அரபிக்கடல்) 23சதவீதமும் உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 18 சதவீதமும் சதுப்பு நிலக்காடுகள் பரவியுள்ளன. மண் அரிப்பை தடுக்கவும், காற்றின் வேகத்தை குறைக்கவும் உதவும் சதுப்புநிலக்காடுகள் குறைவு காரணமாகவே, அந்தமான் தீவு அடிக்கடி புயல், பூகம்பத்தை சந்தித்து வருகிறது. இதற்கு அடுத்த கட்டத்தில் இருப்பது, இந்தியாவில் மேற்கு கடற்பகுதியான அரபிக்கடலாகும்.

 
வெறும் 23 சதவீதம் மட்டுமே சதுப்புநிலக்காடுகளை கொண்டுள்ளதால்,  அரபிக்கடலும் கடல்வழி அபாயத்தை எதிர்கொள்ளும் தன்மையை இழந்து வருகிறது. போதாக்குறைக்கு, அப்பகுதியில் தொடர்ந்து சதுப்புநிலக்காடுகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் அரபிக்கடல் பகுதியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கிழக்கு கடற்பகுதியில் போல, இங்கு ஆறுகள் கொண்டு வரும் வண்டல் மண் இருப்பதில்லை. இதுவும் இங்கு சதுப்பு நிலக்காடுகள் குறைய முக்கிய காரணமாகும். வங்காளவிரிகுடாவில் அரபிக்கடலை விட அதிகமான சதுப்பு நிலக்காடுகள் இருந்தாலும், இங்கு அவற்றை அபகரிக்கும் செயல் அதிகமாக நடந்து வருகிறது. இது சதுப்பு நிலக்காடுகளின் வீழ்ச்சிக்கு  வழிவகுக்கும். இந்திய கடற்பகுதி முழுவதும் சதுப்புநிலக்காடுகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment